3,500 மெட்ரிக் டன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி
உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 3,500 மெட்ரிக் டன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அதன் முதல் தொகுதி கடந்த 23 ஆம் திகதி நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பொன்னி சம்பா அரி
அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசியின் மற்றுமொரு தொகுதி கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறைக்குத் தீர்வாக, GR 11 பொன்னி சம்பா அரிசியைக் கடந்த 15 ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அதன்படி, இறக்குமதியாளர்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களைப் பெறுவதற்கான தேவையிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
எனினும், ஒரு இறக்குமதியாளருக்கு அதிகபட்சமாக 520 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது.
நாட்டில் மதிப்பிடப்பட்ட ஆண்டு அரிசி நுகர்வு சுமார் 2.4 மில்லியன் மெட்ரிக் டன் என்பதுடன், இதில் கீரி சம்பாவின் ஆண்டு நுகர்வு இரண்டு இலட்சம் மெட்ரிக் டன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.