குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள்
குவைத்தில் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டு இன்று (20) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் ஆரம்பத்தில் வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக குவைத்துக்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களில் இருந்து விலகி, வேறு இடங்களில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் குவைத் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த 20 பேரும், சட்ட நடவடிக்கைகளின் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஜசீரா ஏர்வேஸ் J9-551 விமானம் மூலம் குவைத் நகரிலிருந்து பயணித்து, இன்று அதிகாலை 3.10 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
நாடு திரும்பியவர்களுக்கு தேவையான மேலதிக உதவிகளை வழங்கும் வகையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு தேவையான நிதியுதவி மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.