திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகை திருட்டு
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (26) தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேரூந்தில் முருங்கன் பகுதியில் இருந்து ஆசிரியரான பெண் ஒருவரும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப் பேரூந்து வவுனியா, மாவட்ட செயலகம் முன்பாக பயணித்த போது அப் பெண் பேரூந்தில் இருந்து இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பெண்ணின் கைப் பை திறக்கப்பட்டு அதற்குள் இருந்த அவரது சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் காணாமல் போனமையை அவதானித்துள்ளார்.
உடனடியாக பேரூந்தை நிறுத்தி பேரூந்தில் தேடிய போதும் நகை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் முறைப்பாடு
இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் அவ் ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்கா தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்கா (37348), திலீப் (61461), பொலிஸ் கான்டபிள்களான உபாலி (60945), தயாளன் ( 91792), இரேசா (11643) உள்ளிட்ட குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களும் ஆக 4 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்டதாக கூறப்பட்ட 20 பவுண் நகை முச்சக்கர வண்டி மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பறப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையின் பின் நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.