13 வயது மகனுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்!
13 வயதுடைய மகன் தந்தையினால் கண்மூடித்தனமாக பிரம்பால் தாக்கப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (04) காலை மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த மகனை தோட்டத்திற்கு அருகிலுள்ள புற்களை அகற்றுமாறு தந்தை கூறியுள்ளார். எனினும் மகன் புற்களை வெட்டததால் கோபமடைந்த தந்தை மகனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
தாய் முறைப்பாடு
வீட்டில் இருந்த பிரம்பால் சிறுவனின் தலை மற்றும் கால்களில் பலமுறை தாக்கிய போது தாயார் அதனை தடுக்க முற்பட்டுள்ளார். இதன்போது கணவனால் தானும் தாக்கப்பட்டதாகவும் தாய் அராவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேசமயம் இதற்கு முன்னரும் பல முறை தந்தை சிறுவனை தாக்கியதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.