மியான்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து 13 இலங்கையர்கள் மீட்பு
மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் மொத்தம் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நபர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட11 இளைஞர்கள் மற்றும் 02 இளம் பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
மீட்கப்பட்ட இலங்கையர்கள்
அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தாய்லாந்து எல்லையிலிருந்து பெங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.வரும் நாட்களில் அவர்கள் இலங்கைக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் நான்கு இலங்கையர்கள் மியான்மாரில் உள்ள தனித்தனி சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மற்றும் மியான்மாரின் துணைப் பிரதமருடனான கலந்துரையாடலின் போது, இந்த சைபர் குற்ற நடவடிக்கைகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு உதவுமாறு இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் விஜித ஹேரத் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக, 13 நபர்கள் இப்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.