கணவர் சிறையில்; பெண் அதிகாரியின் தகாத உறவால் 12 வயது மகளுக்கு நேர்ந்த கதி!
பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் 12 வயது மகள், அந்த அதிகாரியின் கள்ளக் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபரின் விஷேட உத்தரவுக்கு அமைய நேற்று பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பெண் பொலிஸ் பரிசோதகரின் கணவர், சிறைச்சாலைகள் திணைக்களத்தில் சேவையாற்றிய நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், பெண் பொலிஸ் பரிசோதகர், வர்த்தகர் ஒருவருடன் தகாத உறவை பேணி வந்துள்ளார். வர்த்தகருடன் ஜா எல பகுதியில் வீடொன்றில் தனது இரு பிள்ளைகளுடன் வசித்துள்ளார்.
இந் நிலையில், வர்த்தகரால் வீட்டில் வைத்தே, 12 வயதான, பொலிஸ் அதிகாரியின் மகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பல நாட்களாக சிறுமி துஷ்பிரயோகம்
பல நாட்களாக சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சிறுமி தாயிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தாயான பெண் பொலிஸ் பரிசோதகர் உடனடியாக தனது இரு பிள்ளைகளையும் வட மேல் மாகாணத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்கு அனுப்பி வைத்துடன் வர்த்தகருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறியுள்ளார்.
இவ்வாறான நிலையில், வட மேல் மாகாணத்தின் பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு, பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, தொலைபேசி ஊடாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் அதிகாரிகள் வீட்டுக்கு சென்று சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
இந் நிலையில் சிறுமியை குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்து பரிசோதனைகளை முன்னெடுத்து சிகிச்சையளித்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பிலான சிறப்பு விசாரணைகளை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேனுகா ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.