1000 ரூபா சம்பள விவகாரம்; இ.தொ.காவிற்கு கிடைத்த முதல் வெற்றி!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்க மறுத்து கம்பனிகள் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று (09) நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்மொழியப்பட்ட 1,000 ரூபாய் சம்பள கோரிக்கை தொழில் அமைச்சினால் ஆய்வு செய்யப்பட்டு, வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டது.
எனினும் அந்த வர்த்தமானிக்கு எதிராக பெருந்தோட்ட கம்பனியால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, தொடர் விசாரணைக்குப் பின் இவ்வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கூறுகையில்,
தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வுத்தரவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கு கிடைத்த முதல் வெற்றி என கூறினார்.
அதோடு எதிர்காலத்திலும் தொழிலாளர்களுக்கு அதிக சமபளத்தை பெற்றுத் தருவதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருப்போதும் பின்வாங்காது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல 1,000 ரூபாய் சம்பளம் என்பது போதுமானதல்ல என சுட்டிக்காட்டிய செந்தில் தொண்டமான் , எனவே மற்றுமொரு சம்பள உயர்வை நோக்கி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்படும் எனவும் கூறினார்.