மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் இன்று (23) காலை அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த உதயசூரியன், அவரது மனைவி பரிமளம் மற்றும் அவரது நான்கு குழந்தைகள், வவுனியா மாவட்டம் புவரசம் குளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் என இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இவ்வாறு தமிழகம் சென்றுள்ளனர்.
மன்னார் மாவட்டம் கள்ளப்பட்டி பகுதியில் இருந்து நேற்று (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியை அவர்கள் இன்று காலை அடைந்தனர்.
தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அடைக்கலம் புகுந்தவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை இலங்கை ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் முதல் இதுவரை தமிழகத்திற்கு அகதிகளாக சென்றோர் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.