யாழில் படகு விபத்தில் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று (26) உயிரிழந்துள்ளார்.
வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குள பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை வாடியில் இன்றையதினம் அதிகாலை கரவலை மீன்பிடி நடவடிக்கை இடம்பெற்றது.
இந்நிலையில் நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் அசாதாரண காலநிலை வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள கடல் பகுதியிலும் நிலவியது.
இதன்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் கடலின் அலையில் இருந்து படகை விடுவிப்பதற்கு முயன்ற போது , படகு அலையில் சிக்குண்டு இளைஞன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சின்னத்தம்பி சசிதரன் என்று தெரிவிக்கப்படுகிறது. சடலம் நித்தியவெட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.