துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞன்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், இலக்கு வைக்கப்பட்ட நபர் அல்ல என பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்றிரவு (20-01-2024) தெலிஜ்ஜவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
நேற்று (20) இரவு 08 மணி அளவில் மாத்தறை - மாலிம்படை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலிஜ்ஜவில சந்தியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தொலைபேசி உபகரணக் கடைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மிந்திக அளுத்கமகே எனவும், அவர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டதுடன், கடையின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மாத்தறை பிரதான நீதவான் அனுருத்த புத்ததாச, அவரை பொலிஸ் காவலில் எடுத்து பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.