சட்டவிரோதமாக ஆமைகளைக் கடத்த முயன்ற இளைஞன் கைது
திருகோணமலை தம்பலகாமம் கோவிலடி பகுதியில் சட்டவிரோதமாக ஆமைகளைக் கடத்த முயன்ற இளைஞன் ஒருவரை நேற்று மாலை (03) கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர் ஆமைகளை சுற்றுலா விடுதிகளுக்குப் பணத்திற்காக விற்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கந்தளாய் பிரிவு குற்றவியல் மற்றும் கொலைப் பிரிவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், சந்தேக நபர் வைத்திருந்த ஆறு ஆமைகளை பொலிஸார் மீட்டனர்.

மீட்கப்பட்ட ஆமைகளில் மூன்று பால் ஆமைகள் மற்றும் மூன்று கல் ஆமைகள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த இருபத்தைந்து வயதுடைய இளைஞர் எனப் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரமான இடங்களில் வாழும் ஆமைகளைப் பிடித்து, திருகோணமலையில் உள்ள பல்வேறு சுற்றுலா ஹோட்டல்களுக்குப் பணத்திற்காக இவர் விற்று வந்துள்ளதாக கந்தளாய் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், மீட்கப்பட்ட ஆமைகளும் மேலதிக விசாரணைகளுக்காக தம்பலகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.