விமான நிலையத்தில் கைதான இளைஞர்கள் ; சிக்கிய பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள்
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (27) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய வர்த்தகரும் 32 வயதுடைய நிறுவனமொன்றின் மேற்பார்வையாளரும் ஆவார்.
நவீன கையடக்கத் தொலைபேசிகள்
சந்தேக நபர்கள் இருவரும் டுபாயில் இருந்து இன்றைய தினம் காலை 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ( Green Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 955 நவீன கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகளின் மொத்த பெறுமதி 10 கோடி ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.