மன்னார் வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த இளம் பெண் உயிரிழப்பு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில், குழந்தை பிரசவித்து சில நாட்களில் இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த மரியராஜ் சிந்துஜா (27) எனும் தாயே உயிரிழந்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09ம் திகதி குறித்த பெண் குழந்தையை பிரசவித்துள்ளார். மறுநாள் 11ம் திகதி மருத்துவமனையில் இருந்து தாய் சேய் நலமாக வெளியேறியுள்ளார்கள்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (27) தாய்க்கு குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அன்று இரவு நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
குருதி ஓட்டம் கட்டுப்படாமல் தொர்ச்சியாக கசிந்து கொண்டே இருந்ததன் காரணத்தினால் விடிய காலை ஆறு முதல் ஏழு மணி அளவில் சுய நினைவை இழந்துள்ளார். அதன்பின் அவசர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது நண்பகல் 11 மணிளவில் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருதிப் பெருக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அன்று இரவு வைத்தியர்கள் பார்வையிட்டு இருந்தால் தனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என இந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க குற்றம் சாட்டுகின்றார்.
தாயின் குற்றச்சாட்டு தொடர்பில் நீதியான விசாரணை செய்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்த சுகாதாரத் துறையினர் முன்வர வேண்டும் என உறவினர்கள் கோரியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபாவை தெரிவிக்கையில், விசேட சட்ட வைத்திய அதிகாரி உடற்கூற்று பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளார்.
மேலதிக பரிசோதனைகளுக்காக உடற் கூற்று மாதிரிகள் கொழும்புக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிய முடியும்.
அதேவேளை வைத்தியசாலையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.