நீராடச் சென்ற 18 வயது இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு
மொனராகலை மாவட்டம், வெல்லவாய, தெலுல்ல பகுதியில் அமைந்துள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற 18 வயதுடைய இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஊவா குடாஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பௌத்த பிக்குகள் சிலர், நிகழ்வுக்குப் பின்னர் நேற்று கிரிந்தி ஓயாவுக்கு நீராடச் சென்றுள்ளனர்.

அப்போது, நீராடிக்கொண்டிருந்த இளம் பிக்கு ஒருவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து, அருகிலிருந்த பிரதேச மக்கள் உடனடியாக அவரை மீட்டு தணமல்வில ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர் 18 வயதுடைய இளம் பிக்கு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவா குடாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.