தமிழர் பகுதியில் கோவில் தகராறில் கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது
வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, பூசை செய்வதற்கு முற்பட்டபோது ஏற்பட்ட தகறாரில் கத்தியால் குத்தி இளம் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபர் உட்பட ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 06ஆம் திகதி இரவு நாவற்குளம் பகுதியில் நபரொருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

விசேட தேடுதல் நடவடிக்கை
நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டபோது ஏற்பட்ட தகறாரில் தாக்கப்பட்டு 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே பலியானதுடன், குடும்பஸ்தரின் அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளானமை குறிப்பிடதக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதனடிப்படையில், ஓமந்தை பொலிஸ் குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், அதற்கு உதவி புரிந்த இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 27 வயதுடைய ஆண்கள் எனவும், சந்தேக நபரான பெண்கள் இருவரும் 20 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஓமந்தை, நாவற்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும், கொலைக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஓமந்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.