முன்னாள் காதலியின் சாட்சியத்தால் சிக்கிய யோஷித ராஜபக்ஷ ; நீதிமன்றில் அம்பலமான பல தகவல்கள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீஎஸ்என் தொலைக்காட்சியின் முன்னாள் பிரதானியும், யோஷித்தவின் முன்னாள் காதலியுமான யசாரா அபேநாயக்க முக்கிய சாட்சியமளித்துள்ளார்.
இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் நெறிப்படுத்தலில் முறைப்பாட்டாளர்களின் தரப்பு சாட்சியாளர்களான நால்வரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

முக்கிய சாட்சியம்
வழக்கின் முக்கிய சாட்சியாளரான சீஎஸ்என் தொலைக்காட்சியின் முன்னாள் பிரதானியும், யோஷித்தவின் முன்னாள் காதலியுமான யசாரா அபேநாயக்க சாட்சியமளிக்கையில்,
"எனக்கும் யோஷிதவுக்கும் இடையே 2009 முதல் 2013 வரை காதல் தொடர்பு இருந்தது. நாங்கள் திருமணம் செய்யவிருந்த நிலையில், கல்கிஸ்ஸை மிஹிந்து மாவத்தையில் அவரது பாட்டிக்கு சொந்தமானது என யோஷித கூறிய வீடு ஒன்றை நாங்கள் பார்வையிட்டோம். திருமனத்தின் பின்னர் அந்த வீட்டிற்கு குடிபெயர்வதற்காக வீட்டின் உற்புர அலங்கார வடிவமைப்பாளருடனும் பேசினோம் எனத் தெரிவித்தார்.
மற்றொரு சாட்சியாளரான லுஷான் ரத்நாயக்க சாட்சியமளிக்கையில்,
தனது மனைவியின் நோய் நிலைமை காரணமாக கல்கிஸ்ஸ சிறிமல் உயன பகுதியிலிருந்த 34.5 பேர்ச் காணி மற்றும் வீட்டை 34 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யத் தீர்மானித்ததாகக் கூறினார். தனது நண்பரான வசந்த ஜயசூரிய மூலம் வந்த தரப்பினரே இக்காணியை வாங்கினார்கள். எனினும் அது யார் என்பது அப்போது எனக்கு தெரியாது.
ராஜகிரியவில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் இதற்கான உறுதிப்பத்திரத்தில் கையெழுத்திட்ட போதே வீட்டை கொள்வனவு செய்பவரின் பெயர் 'டேசி ஃபொரஸ்ட் (யோஷிதவின் பாட்டி) எனத் தமக்குத் தெரியவந்தது.
34.54 மில்லியன் ரூபா பணம் வங்கி கணக்கில் முழுமையாக வைப்பு செய்யப்பட்டதன் பின்னரே உரிமம் மாற்றறும் ஆவணத்தில் கையெழுத்திட்டோம். எனினும் பணத்தை வைப்பிலிட்டவர் யார் என தெரியாது. காணியை வாங்குவதற்கு முன்னரே யோஷிதவும் யசாராவும் அங்கு வந்து பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது சாட்சியமளித்த வசந்த ஜயசூரிய, யோஷித்த யசாராவை திருமணம் செய்யவிருந்தார். ஆகையால் நான் யோஷிதாவிடம் சிறிமல் உயானாவில் உள்ள காணியை பற்றிக் கூறினேன். அவர் அந்த காணியை கொள்வனவு செய்ய தயாராக உள்ளதாக கூறினார். அதன்படி, ராஜகிரியாவில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் காணியை கொள்வனவு செய்வதற்கான பத்திரங்கள் கையொப்பமிடப்பட்டன.
சிறிமல் உயன காணியை வாங்குவதற்கான முழுத் தொகையான 34 மில்லியன் ரூபாவும், வங்கிக்கு ஒரு பயணப் பையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் போன்ற ஒருவரால் ரொக்கமாகக் கொண்டுவரப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து, மேலதிக சாட்சி விசாரணைகளை ஜூலை 17 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் ஏனைய சாட்சியாளர்களையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.