உலக கவனம் ஈர்ப்பு ; ட்ரம்ப் சம்மதத்திற்குப் பிறகு ஈரான் இணக்கம்
பாகிஸ்தான் முன்னெடுத்த இராஜதந்திர முயற்சிகளின் பலனாக எட்டப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்த உடன்படிக்கையை ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானின் புதிய உச்சநிலைத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் (Ayatollah Mojtaba Khamenei) நேரடி அங்கீகாரத்துடன் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையை "ஈரானுக்குக் கிடைத்த ஒரு பெரும் வெற்றி" என வர்ணித்துள்ள பாதுகாப்புச் சபை, தங்களது நிபந்தனைகள் மற்றும் போராட்டத்திற்கு மதிப்பளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த போர் நிறுத்தத்தை ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற்றுவதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும் நிபந்தனையுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்குச் சம்மதம் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஈரானும் தற்போது தனது சம்மதத்தை வெளியிட்டுள்ளதால், மத்திய கிழக்கில் நிலவிய போர் அச்சம் தற்காலிகமாக நீங்கியுள்ளது.