வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் பெண்கள்: கொழும்பில் நபர் ஒருவர் அதிரடி கைது!
துபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரின் உள்ளூர் முகவர் (தரகர்) ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கொழும்பில் கைது செய்துள்ளனர்.
தொழில் பெற்றுத் தருவதாக பெண்களை ஏமாற்றி வேலைவாய்ப்பு முகவரகம் ஊடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியதாக இந்த நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினரால் அவிசாவளையைச் சேர்ந்த 45 வயதுடைய குறித்த சந்தேக நபர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்கள் சிலர், நாடு திரும்பியதன் பின்னர் காவல்துறைக்கு அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஆட்கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு வந்த தருணத்தில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
அவர் நேற்று நீர்கொழும்பு நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் செயலாளர் போன்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அவர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.