பரவும் புதுவித நோய் ; சினிமா பாணியில் மொட்டை அடித்து ஏமாந்த பெண்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கொரோனா போன்ற புதுவித நோய் தலைமுடி வழியாகப் பரவுவதாகவும், தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் மர்ம நபர் ஒருவர் போனில் கூறியுள்ளார்.
மொட்டை அடித்தால் ரூ.15,000 ஊக்கத்தொகையும், ஆண்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்றும் அவர் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

இதனை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே மொட்டை அடித்து பணம் பெற்றதாகக் கூறி சில புகைப்படங்களையும் அவர் அனுப்பியுள்ளார். மர்ம நபரின் பேச்சை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் மொட்டை அடித்துள்ளனர்.
மேலும் சிலர் மொட்டை அடிக்கத் தயாராக இருந்த நிலையில், பணம் தருவதாகக் கூறிய நபரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.