தொழிலுக்காக சென்ற யுவதிக்கு நேர்ந்த துயரம்; ஒன்றரை மாதத்தின் பின்னர் நாட்டுக்கு வந்த சரீரம்
மலேசியாவில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் பேருவளையைச் சேர்ந்த 32 வயதான பெண்ணின் உடல் ஒன்றரை மாதத்தின் பின்னர் இன்று நாட்டுக்கு எடுத்துவரப்பட்டது.
இந்நிலையில் அப் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார். சதுரிக்கா பிரியதர்ஷனி என்ற குறித்த பெண் கடந்த 2019.12.30 ஆம் திகதி தொழில் நிமித்தம் மலேசியா பயணமானதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அழகுசாதன நிலையத்தில் பணியாற்றுவதற்கு சென்ற குறித்த பெண்ணுக்கு, கொவிட் பரவல் நிலைமை காரணமாக இரண்டு மாதங்கள் மாத்திரமே பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர் தொழிலை இழந்ததால், மலேசியாவில் அறிமுகமான இலங்கையர் ஒருவரின் வர்த்தக நிலையத்தில் பணியாற்ற தனக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவர் தமது வீட்டுக்கு அறிவித்திருந்தார்.
தொடர்ந்து அவ்வப்போது, வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய யுவதி, 2021 ஆகஸ்ட் 30 க்கும் பின்னர் அவரிடமிருந்து எவ்வித அழைப்பும் கிடைத்திருக்கவில்லை என அவரது தாய் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து , அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பணி இடத்திலிருந்து அறிவிக்கப்பட்டதாகவும், எனினும், தமது மகளுக்கு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் அப்பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் உடல் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவரது சரீரம் மீதான பிரேத பரிசோதனை நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.