யாழ் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பெண்!
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மீது, முறைப்பாடு அளித்தும் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என வைத்தியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
காங்கேசன்துறை பகுதியில் பெரியளவிலான தங்குமிடம் ஒன்றினை அமைத்து வரும் நபர் ஒருவரின் உறவினர் சுகவீனம் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தகாத வார்த்தைகளால் திட்டிய பெண்
அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த வேளை , குறித்த நபரின் மகன் மற்றும அவரது உதவியாளரான பெண்ணொருவரும் , அவசர சிகிச்சை பிரிவினுள் நுழைந்து , நோயாளியை , தனியார் வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.
அதற்கு உரிய நடைமுறைகளை பின் பற்றியே நோயாளிகளை மாற்ற முடியும் எனவும் , குறித்த வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டியை நோயாளி சார்பிலானவர்களே வரவழைத்து அழைத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.
அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என உதவியாளர் என கூறி சென்ற பெண் வைத்தியர்களுடன் தர்க்கப்பட்டார். அதன் போது வைத்தியர்கள் , ஒருவர் மாத்திரமே அவசரசிகிச்சை பிரிவில் நோயாளரை பார்வையிட அனுமதி என கூறி உதவியாளர் என கூறி வந்த பெண்ணை வெளியே செல்லுமாறு பணித்துள்ளனர்.
அசமந்தமாக செயற்பட்டு வரும் பொலிஸார்
அதற்கு வைத்தியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய பெண் , தமக்குள்ள அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி , உங்கள் அனைவருக்கும் நடவடிக்கை எடுப்பேன் என கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.
அதோடு அப்பெண் , வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு இடையூறு விளைவுக்கு முகமாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்காது அசமந்தமாக செயற்பட்டு வருவதாக வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.