பொல்லால் தாக்கப்பட்டு பெண் கொலை; சந்தேக நபர் தப்பியோட்டம்
பொல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாக கொனபீனுவல பொலிஸார் தெரிவித்தனர்.
காலி பிரதேசத்தில் சாமகம, அளுத்வல பகுதியில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சாமகம, அளுத்வல பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொசன் பௌர்ணமி தினத்தில் தாக்குதல்
உயிரிழந்த பெண் தனது சகோதரனின் மகனுடன் நீண்ட காலமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொசன் பௌர்ணமி தினத்தன்று வழிபாடுகளை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்குச் சென்ற பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இந்த கொலை சம்பவமானது கடந்த 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான கொலை செய்யப்பட்டவரின் சகோதரனின் மகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொனபீனுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.