கட்டுநாயக்கவில் பெண் ஒருவரால் அதிகாரிகள் அதிர்ச்சி; சூட்கேசில் சிக்கிய பொருள்!
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை, நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 01.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
31 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதி
இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபரான பெண் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 20,800 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 104 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட்டுகள் 31 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.