அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா? இராஜாங்க அமைச்சரின் முக்கிய தகவல்
அரசாங்கம் தற்போது அரசியல் விவகாரங்களுக்கு முன்னுரிமையளிக்கவில்லை எனவும் மாறாக நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களுக்கே முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார (Shantha Bandara) தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்க்கட்சியினர் கூறுவதைப் போன்று அமைச்சரவையில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் சாந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமெனில் முறையான சட்ட கட்டமைப்பு அவசியமாகும். அதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.
அதற்கமைய புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கமைய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுமே தவிர, மக்களுக்கு எவ்வித துன்புறுத்தல்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது.
அரசாங்கத்திடம் தற்போது ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான பெரும்பான்மை பலம் காணப்படுகிறது. எதிர்க்கட்சியினர் இணையவில்லை என்பதற்காக அரசாங்கம் வீழ்ச்சியடைப் போவதில்லை.
அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் நடவடிக்கைகள் வெற்றிகரமானவை என எண்ணினால், விரும்பும் எவரும் எம்முடன் இணையலாம்.
அரசுடன் இணைய விரும்புபவர்களை அச்சுறுத்துவதற்காகவே அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகக் கூறுகின்றனர்.
அவ்வாறு பணத்தைக் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. அரசாங்கம் அரசியல் விவகாரங்களுக்கு முன்னுரிமையளிக்கவில்லை.
மாறாக நாட்டின் முன்னேற்றம் குறித்தே அவதானம் செலுத்தியுள்ளது. எனவே அமைச்சரவை மாற்றங்கள் எவையும் இடம்பெறாது என்று அவர் தெரிவித்துள்ளார்.