3 நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை சூடுபடுத்தி பரிமாறிய மனைவி.. பரிதாபமாக பலியான உயிர்.
பெங்களூருவில் மூன்று நாட்களுக்கு முன்பு செய்த சாம்பாரை தொடர்ந்து பரிமாறியது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு, 27 வயது இளம்பெண்ணின் உயிரை பறித்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.
காவ்யா என்ற அந்தப் பெண், தனது கணவர் ரங்கசாமியுடன் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் வாக்குவாதத்திற்கு பிறகு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தீவிர விசாரணை
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று, மூன்று நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறியதால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் வெடித்தது.
இதில் ஆத்திரமடைந்த கணவர் ரங்கசாமி, காவ்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காவ்யா, விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லியை அருந்தினார்.
வாந்தி எடுத்த அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.