தமிழர் பகுதியில் மீன் விற்பனை என்ற போர்வையில் அரங்கேறிய சம்பவம்
மீன் விற்பனை என்ற போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் இன்று மாலை இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கைது
இதன் போது 49, 23 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து 40 மற்றும் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
இதில் கைதான சந்தேக நபர்களில் ஒருவர் ஏற்கனவே போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் எனவும் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்ட போது மற்றுமொரு சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய சமகாலத்தில் மற்றொரு சந்தேக நபரான மீன் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இவ்விருவரும் வியாபாரி, உதவியாளர் என மீன் விற்பனையுடன் செயற்பட்டு வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.