ஆங்கிலம் எதற்கு? ஆளுநரின் கூட்டத்திலிருந்து கோபமாக வெளிநடப்பு செய்த சிறீதரன்!
வடமாகாண ஆளுநர் தலைமையில் இன்று இடம்பெற்ற வடமாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வெளியேறி கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
புதிய ஆளுநர் தலைமையில் வடமாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வட மாகாண செயலகத்தில் நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியது முதலே கூட்டத்தில் பங்கேற்றுள்ள அரச அதிகாரிகளும், ஆளுநரும் ஆங்கிலத்திலேயே கலந்துரையாடல் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் மாகாணத்தில் பணியாற்றும் அதிகாரிகளும், மக்களும் தமிழர்கள் என்பதானால் தமிழ் மொழியில் உரையாற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் அதற்கு எவரும் செவிமடுக்காத நிலையில் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக சிறிதரன் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்திருப்பதாக தெரிவித்தார்.