சுமந்திரன் அணியின் வல்வெட்டித்துறை நகரசபையின் பாதீடிற்கு ஆப்பு
வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு ஒரு மேலதிக வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபையின் அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது புதிய தவிசாளர் செல்வேந்திராவால் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டது.
தெளிவுரையின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது பாதீட்டை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் பாதீடு திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமும் பாதீடு தோல்வியடைந்தால், தவிசாளர் பதவி இழக்க நேரிடும்.
வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளரான கோணலிங்கம் கருணாந்தராசா (வயது 76) கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். அந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட கே.சதீஸை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து , சுயேச்சை குழு உறுப்பினரான எஸ்.செல்வேந்திரா சுமந்திரன் அணியின் உதவியுடன் புதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.