சீன தூதுவரின் கருத்தில் கரிசனை கொண்டுள்ளோம்; சுரேன் ராகவன்
சீன தூதுவர் வடக்கில் தெரிவித்த கருத்தில் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
ஓமந்தை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் சீன தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனை கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை சுயாதீனமான சுதந்திரமான நாடு என்ற ரீதியிலும் எங்களுடைய எதிர்காலத்திற்காகவும் வெளிவிவகார உறவினை எங்களுடைய நாட்டின் பெருமைக்காகவும், தனித்தன்மைக்காகவும் பாவிக்க வேண்டியதாக உளளது.
இலங்கை ஒரு நாட்டின் பகடைக்காயாக மாறக்கூடாது. அண்மையில் இடம்பெற்ற சீனத்தூதுவரின் விஜயம் கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை விட அவர் அங்கே கூறிய கருத்துக்கள் எமக்கு கரிசனையாக இருக்கின்றது.
அவை இந்தியாவையும் இலங்கையையும் பகை செய்யும் விடயங்களாக சிலர் ஊடகங்களில் கூறியுள்ளனர். ஆனால் இந்தியா எங்களுடைய தொப்புள்கொடி உறவு, எங்களுடைய உண்மையான தாய்நாடு, அங்கிருந்து வந்த மதம், மொழி எல்லாமே எங்களுக்கு சொந்தமாகியிருக்கிறது.
எனவே இந்தியாவுடனான உறவை முறிவடைய விடக்கூடாது என்ற நம்பிக்கையில் தாம் இருப்பதாக தெரிவித்த சுரேன் ராகவன், வருகின்ற நாட்களில் இவ் அரசியல் விடயம் குறித்து மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.