மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேநீர் கொடுத்தது தவறா? சீறும் இராஜாங்க அமைச்சர்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள், அரச தரப்பின் எம்.பி.க்கள் உள்ளிட்டவர்கள் துறைமுகத்தை பார்வையிட வந்தபோது தேநீர் கொடுத்தது தவறா? என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு , அவ்வாறு தேநீர் கொடுத்ததை திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்தவர்களை உடனடியாக கைது செய்வதுடன் பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
தேநீர் கொடுப்பதில் தவறென்ன உள்ளது?
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரச தரப்பினர் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த போது செங்கம்பளம் விரித்து அவர்கள் வரவேற்றப்பட்டார்கள்.
இந்நிலையில் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச தரப்பினர் கப்பலில் உல்லாச விருந்தில் ஈடுபட்டுள்ளார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் பொய் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் தெளிவு படுத்துமாறு அரச தரப்பின் உறுப்பினர்கள் பலமுறை வலியுறுத்தினார்கள்.
துறைமுக விடயதானத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் நான் அவர்களை துறைமுகத்தை பார்வையிடுவதற்கு அழைத்து சென்றேன்.
வீட்டுக்கு வந்தவர்களுக்கு தேநீர் கொடுப்பதில் தவறென்ன உள்ளது? அன்று இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்துக்கு துறைமுக அதிகார சபையின் நிதி செலவழிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிகாட்டினார்.
அதேவேளை இரண்டு நாட்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் தரப்பு அமைச்சர்கள் துறைமுக அதிகா ரசபைக்கு சொந்தமான இரு கப்பல்களைப் பயன்படுத்தி கடல் நடுவில் விருந்துபசார கொண்டாட்டம் போட்டனர் என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.