கிழக்கு மக்களுக்கு வந்த எச்சரிக்கை; அவதானம்
கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் குறிப்பாக ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இருந்து வயிற்றோட்டம் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் எனவே பிரதேச மக்கள் அவதானத்துடன் செயபடுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வயிற்றோட்டம் காரணமாக சிறுவர்கள் மாத்திரம் இன்றி பெரியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது தொடர்பில் அவதானம் தேவை என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் மட்டு. போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டொக்டர் விஜி திருக்குமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன் அறிகுறிகளாக காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றோட்டம் காணப்படும். சில சமயம் இரத்தம் கலந்த சளியுடன் வயிற்றோட்டம் காணப்படும் எனவும் குறிப்பிட்ட அவர் இது ஒருவகை பற்றீரியா தொற்றினால் ஏற்படுகிறது.
சில சமயம் வயிற்றோட்டம் இல்லாமல் அல்லது குறைவான வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிறு ஊதுதல் போன்ற குணங்குறிகளுடன் தோன்றலாம். அதேவேளை சிறுவர்கள், உணவு மற்றும் நீர் அருந்துவது குறைவாகவும் நீர் இழப்பு அதிகமாகவும் இருப்பதால் சோர்வு மற்றும் மயக்க நிலை ஏற்படும். எனவே, இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்றின் பின் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற Miss-C எனப்படும் பல்தொகுதி அழற்சி நோய் நிலையின் போதும் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள் தோன்றும் என்றும், எனவே, குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு காணப்படுமாயின் விரைவாக வைத்தியசாலையை நாடுமாரும் அவர் கூறினார்.