யாழில் அண்மையில் திருமணம்; கைக்குண்டுடன் கைதான இளைஞர்
யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே, மருதனார்மடம் பகுதியில் வைத்து நேற்றைய தினம் (03) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அண்மையிலேயே திருமணம்
கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் , மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி, அவரைக் காயப்படுத்தியதுடன் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையிட்டுச் சென்ற கும்பலில் ஒருவராக இளைஞன் செயற்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வன்முறைக் கும்பல் ஒன்றின் முக்கிய உறுப்பினராகச் செயற்படும் இந்த இளைஞருக்கு அண்மையிலேயே திருமணம் நடைபெற்றுள்ளதுடன், அவர் தற்போது மருதனார்மடம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.