வீட்டை விட்டு வெளியேறிய விஜய் ; பரபரப்பாகும் தமிழகம்
கரூர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தில் இடம்பெற்ற விபரீதத்தின் பின்னர் விஜய் முதல் முறையாக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.
கரூரில் இருந்து நேற்று முன்தினம் (27) அவசர அவசரமாக சென்னைக்குச் சென்ற விஜய், தற்போது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
தமிழகத்தில் நிர்வாக முடக்கல்
அவர் பட்டினம்பாக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இன்னொரு வீட்டிற்கு செல்லலாம் என கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். கரூர் அரசு மருத்துவமனையில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று தமிழகத்தில் நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடம், மருத்துவமனை, மற்றும் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கரூர் சம்பவம் தொடர்பாக அரசு மற்றும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு எதிராக பல்வேறு காணொளிகள் இணையத்தில் பதிவிடப்பட்டு, வேகமாக பரவி வருகின்றன.
இந்த நிலையில், அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.