தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ;இன்று முதல் வீட்டு சிகிச்சை முறை
கொரோனா தொற்றின் சிறிய அறிகுறிகள் தென்படும் 2 தொடக்கம் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் வீட்டு சிகிச்சை முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ரிட்ஜ்வே வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கும் போது, வயது வந்த ஒருவர் சிறுவர்களை கவனித்துக்கொள்ள எப்போதும் இருக்க வேண்டும் என்றும் தொலைபேசி மூலம் சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதால் தேவையான வசதிகளை வழங்க பராமரிப்பாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிப்பது தொடர்பில் விசாரிக்க 1390 என்ற அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை அவசியம் வைத்தியசாலைகளில் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தொற்றுக்குள்ளான 150 சிறுவர்கள், கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.