வாகனங்கள் விற்பனைக்கு ... விளம்பரத்தால் ஏமாறவேண்டாம்!
வாகனங்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் விளம்பரமொன்றை பதிவிட்டு பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்று (28) பலாங்கொடை நகரில் வைத்து ஹல்துமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவராவார்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை
சமூக வலைத்தளத்தில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை இருப்பதாக தெரிவித்து விளம்பரமொன்றை பதிவிட்டு முற்பணத்தையும் வங்கிக் கணக்கின் ஊடாக பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் ஹல்துமுல்ல, சமனலவெவ, கேகாலை மற்றும் கண்டி போன்ற பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் உள்ள நபர்களிடம் சுமார் 200,000 ரூபா பணம் மோசடி செய்துள்ளதாக கூறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.