யாழில் பயங்கர சம்பவம்... வீடொன்றுக்குள் புகுந்து வன்முறை கும்பல்! நகை, பணம் திருட்டு
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டத்துடன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (13-06-2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் அந்த வீட்டுக்குச் சென்ற வன்முறை குழுவினர் வீட்டிலிருந்த தையல் இயந்திரம் குளிர்சாதனப் பெட்டி, ஜன்னல் கண்ணாடிகள், வீட்டு கதவு, ஒலிபெருக்கி சாதனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களை அடித்துடைத்து சேதமாக்கியதுடன், வீட்டிலிருந்த 2 இலட்சத்து பதினோராயிரம் ரூபா பணம், மூன்று பவுண் சங்கிலி மற்றும் இரண்டு பவுண் காப்பு என்பவற்றை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அதன் பின்னர் அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸார் அயல் வீட்டிலிருந்த சிசிரிவி காட்சிகளை பார்வையிட்டுக்கொண்டு இருந்தவேளை, தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் மன்னிப்பு கேட்பதற்காக வந்திருந்தார்.
இதன்போது பொலிஸார் அவரை கைது செய்தனர். மேலும் குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் ஏனையோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.