சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்; பொலிஸார் சந்தேகம்
களுத்துறை தெற்கு கட்டுகுருந்த, கலீல் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று களுத்துறை தெற்கு பொலிஸாரால் இன்று (18) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வேன் பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள வாடகை வாகன சேவை நிலையம் ஒன்றுக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இனந்தெரியாத நபரொருவர் நேற்று (17) இரவு வேனை இப்பிரதேசத்தில் நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
எவரேனும் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாடகை வாகன சேவை நிலையத்திலிருந்து இந்த வேனை வாடகைக்கு பெற்று, அதனை பயன்படுத்திய பின்னர் இப்பிரதேசத்தில் நிறுத்தி வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.