வீட்டின் முன்னால் எரிந்து கருகிய வேன் ; அதிகாலையில் நடந்த அசம்பாவிதம்
மட்டக்களப்பு நகரில் பாடுமீன் வீதியிலுள்ள வீடொன்றின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் ஒன்று இன்று (23) அதிகாலை தீப்பற்றி எரிந்ததையடுத்து தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதன் போது வேன் முற்றாக எரிந்து கருகியுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் இருந்து மட்டக்களப்பிலுள்ள உறவினர் வீட்டிற்கு குறித்த வேனில் வந்தவர்கள், வேனை வீட்டின் முன் நிறுத்திவிட்டு நித்திரைக்கு சென்றுள்ள நிலையில் வேன் அதிகாலை தீப்பற்றியதை கண்டு உடன் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போதும் வேன் முற்றாக தீப்பற்றி எரிந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக குற்றதடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.