திடீரென ஏற்பட்ட தீ பரவல்: பதறியடித்து ஓடிய பொதுமக்கள்! 40 வாகனங்கள் தீக்கிரை
மட்டக்களப்பு - வாழைச்சேனை கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகனத் தரிப்பிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி உட்பட 40 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, முற்சக்கரவண்டி-1, மோட்டார் சைக்கிள்கள் -34, துவிச்சக்கரவண்டி-8, என 40 வரையிலான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், வாகனங்களில் தீ பரவியதால் வெடிச்சத்தம் கேட்டதுடன் புகையுடன் கூடிய இருள் சூழ்ந்த நிலையில் தீ பரவல் பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிலர் அச்சமடைந்து ஓடியதுடன் நிலவரம் அறிந்து பொதுமக்கள் தீயினை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் பணியாளர்கள், மாணவர்கள் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு பஸ்சில் பயணங்களை மேற்கொள்வது வழக்கமாகும்.
திடிரென ஏற்பட்ட இந்த தீ பரவல் சம்பவத்திற்கு காரணம் இது வரை கண்டயறிப்படவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் தீயில் அகப்பட்டு சாம்பலாகியுள்ளதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.