யாழ்.வட்டுக்கோட்டையில் கடற்படையினர் கண்முன்னே கடத்தப்பட்ட தம்பதிகள்! வெளியான புதிய தகவல்
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து தம்பதிகள் கடத்தப்பட்ட போது கடற்படையினர் நடந்து கொண்ட விதம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை கடற்படை தீர்மானித்துள்ளது.
இந்த சம்பவம் வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படைச் சோதனை சாவடிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போதே கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது,
சம்பந்தப்பட்ட கடற்படை வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொன்னாலைச் சந்தியில் கடற்படைச் சாவடிக்கு அருகில் தம்பதிகள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டதாக கடந்த 11 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது.
கடத்தப்பட்ட பிறகு குறித்த இளைஞன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, கடற்படைச் சோதனை சாவடிக்கு அருகில் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற விதம் குறித்த சிசிரிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.