அமெரிக்கத் தளங்கள் தகர்க்கப்பட்டது இதற்காகத்தான் ; ஈரானியப் பேராசிரியர் வெளியிட்ட அதிரடித் தகவல்
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஈரான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என இஸ்ஃபஹான் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் மொஹ்சென் ஃபர்கானி தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு ஈரானின் சிவப்புக் கோடு என வர்ணித்த அவர், இந்த நீரிணையில் அமெரிக்கா ரோந்து செல்வதோ அல்லது அதனைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு கோருவதோ அமெரிக்காவின் வேலை அல்ல என்று சுட்டிக்காட்டினார்.
இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரான் தகர்த்தெறிந்தது இவ்வாறான ஒரு செய்தியைச் சொல்வதற்காகத்தான் என்றும் அவர் கூறினார்.

ஈரான் அமெரிக்கா மீதுள்ள நம்பிக்கையினால் இந்தப் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை, மாறாக பாகிஸ்தான் மீதான மரியாதையினால் மட்டுமே கலந்துகொண்டது.
அமெரிக்கா ஈரானின் பத்து நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பின்னரே இந்தச் செயல்முறை ஆரம்பமானது. அமெரிக்கத் தரப்பிலிருந்து நடைமுறைச் சாத்தியமான, படிப்படியான உறுதிமொழிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே ஈரானின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானியத் தூதுக்குழுவில் உள்ள பிரிவினவாதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஃபர்கானி, இது கடும்போக்குவாதம் பற்றிய விடயமல்ல என்றார்.
இன்று ஈரானின் தேசிய நலன்களே மிக முக்கியம் என்றும், அந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளதாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.
முக்கியமான இந்த நீர்வழிப்பாதை விவகாரத்தில் ஈரான் எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது என்பதை அவர் இதன் மூலம் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார்.