ஈரான் எல்லையில் வீழ்ந்த அமெரிக்காவின் F-15 விமானி மீட்பு ; மற்றொரு விமானியை தேடும் பணிகள் தீவிரம்
ஈரானிய வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (F-15) ரக போர் வானூர்தியின் குழு உறுப்பினர்களில் ஒருவர் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிபிஎஸ் நியூஸ் (CBS News) வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்க இராணுவம் முன்னெடுத்த அதிரடி மீட்பு நடவடிக்கையின் மூலம் குறித்த விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும், இந்த ரக வானூர்திகள் இருவர் பயணிக்கும் வசதி கொண்டவை என்பதால், மற்றொரு விமானியைத் தேடும் பணிகள் தற்போது ஈரானிய எல்லைக்குள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அசாதாரண விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கரோலின் லீவிட் உடனுக்குடன் விளக்கியுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் இது தொடர்பான பாதுகாப்புத் தகவல்களைத் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஈரான் அரசு தப்பியோடிய விமானிகளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பெரும் தொகை வெகுமதி அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் பிளாக் ஹாக் (Black Hawk) ரக உலங்குவானூர்திகள் மற்றும் மீட்புப் படையினர் ஈரானிய வான்பரப்புக்கு மிக அருகில் தாழ்வாகப் பறந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே எந்த நேரமும் நேரடி மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.