இலங்கை உள்ளிட்ட நாடுகள் குறித்து அமெரிக்காவின் அதிரடி தீர்மானம்
இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்வதற்கான அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்துமாறு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.
தகவல் அறிந்த அமெரிக்க வட்டாரங்கள் மற்றும் அரச ஆவணங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நிதியுதவி நிறுத்தம்
இதன்படி, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்ளும் 24 திட்டங்களுக்கான நிதியை நிறுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் உள்ள முகாமைத்துவம் மற்றும் வரவு செலவு அலுவலகம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரொய்ட்டர்ஸின் தகவல்களுக்கு அமைய, இலங்கை, ஈராக், நேபாளம், பெலாரஸ், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, சிரியா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகள் அந்த பரிந்துரை பட்டியலில் அடங்குகின்றன.
இருப்பினும் அமெரிக்க வெளிவிவகார துறையினரும், வெள்ளை மாளிகையின் முகாமைத்துவம் மற்றும் வரவு செலவு அலுவலகமும் இது தொடர்பில் பதில் எதனையும் வழங்கவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் குறித்த திட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி தீர்மானமாக இதனை கருத முடியாது எனவும், இந்த விடயம் தொடர்பில் வெளியுறவுத்துறைக்கு மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.