தெஹ்ரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உக்கிர தாக்குதல்; இரவு தொடங்கி அதிகாலை வரை நீடித்த பதற்றம்!
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிரமான வான்வழித் தாக்குதல்களைச் சந்தித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நீடித்த தாகுதல்களால் தெஹ்ரான் மாநகரம் அதிர்ந்து போயுள்ளது.

உலகிலேயே மிக நீண்ட கால இணைய முடக்கம்
தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள், தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளில் கனரக வெடிகுண்டுகளை வீசியதனால் கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் தரை அதிர்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை செவ்வாய்க்கிழமை என்பது ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் மிகத் தீவிரமான நாளாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்த நிலையில், தெஹ்ரான் மட்டுமின்றி, இஸ்ஃபஹான் மற்றும் கரஜ் போன்ற முக்கிய நகரங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
மின்சார உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்ததால் நீல நிற ஒளிப்பிழம்புகள் வானில் தோன்றியதோடு, நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. சில மணிநேரங்களில் மின்சாரம் சீர்செய்யப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 11-வது நாளாக இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிக நீண்ட கால இணைய முடக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் தகவல் தொடர்பு வசதி இல்லாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதேவேளை, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் தெஹ்ரான் போன்ற நகரங்களில் முறையான பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் இல்லாதது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.