டெங்கு பரவல் தீவிரம் ; நாளொன்றுக்கு 650 வரை டெங்கு நோயாளர்கள் பதிவு
இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,000 ஐத் தாண்டியுள்ளது.
இதற்கமைய, ஜனவரி மாதம் முதல் இன்று வரை நாட்டில் 46,037 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

தற்போது நாளாந்தம் 600 முதல் 650 வரையான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 12,196 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த வைத்தியர் கபில கன்னங்கர, இது ஒரு மாதத்திற்குள் பதிவான அதிகூடிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எனவும் கூறினார்.
மாகாண ரீதியாக ஒப்பிடுகையில், மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அது 51.75 சதவீதமாகும்.
இதேவேளை, தென் மாகாணத்தில் 16.16% ஆகவும், சப்ரகமுவ மாகாணத்தில் 9.35% ஆகவும், மத்திய மாகாணத்தில் 7.23% ஆகவும் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 5.05% ஆகவும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்துள்ளார்.