கொத்மலை நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் கொத்மலை ஓயாவில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
அதன்பின்னர் நுவரெலியா நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதித்த பின்னர், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறப்பு தடயவியல் வைத்தியரிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.