உடனடியாக வேலைவாய்ப்பை வழங்குங்கள் ; வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை
திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் பட்டதாரிகளுக்கான நியமனங்களை அரச துறையில் வழங்குங்கள் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு இன்று (2024.06.09) கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போதே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது. அங்கு தொடர்ந்தும் குறிப்பிட்ட விடயங்களாவன,
எங்களது வேலையில்லா பிரச்சினையை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் செவிமடுக்க வேண்டும்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக ஊர் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாங்கள் நாடியுள்ளோம். இந்த அரசாங்கம் மிக விரைவில் எங்களது வேலையில் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையை சரியான முறையில் தீர்க்காவிடின் வீதிக்கு இறங்கிப் போராடுவோம். 900க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எந்தவிதமான வேலையும் இல்லாமல் வீதிகளிலும் ஏனைய இடங்களிலும் இருக்கின்றார்கள்.
வயது 35 கழிந்துவிட்டன. எங்களுக்கு சரியான வேலையை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். 35 வயதுக்குப் பிறகு நிறுவனங்களிலும் உள்ளீர்ப்பு செய்வதற்கு மிகவும் கடினமாகும்.
உள்வாரி, வெளிவாரி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என எவ்வித பாகுபாடுமின்றி எங்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
பெண்ணுரிமை, பெண் சமூகம், பெண்களுக்கான பாதுகாப்பு சகலவற்றையும் வழங்கக்கூடிய ஒரு நாடு அப்படியாக இருந்தும் எங்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற கால அவகாசம் மிகவும் அதிகமாக இருக்கிறது.
உரிய வயதில், உரிய வேலைவாய்ப்புகளை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் அரசாங்கத்திடம் மேலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த சந்திப்பில் பெருமளவு வேலையில்லா பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.