யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, நுவரேலியா தொடர்பில் ஐநா கவலை
இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் உணவுப்பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக உணவுதிட்டமும் ஐக்கியநாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனமும் தெரிவித்துள்ளன.
எனினும் கிளிநொச்சி நுவரேலியா மன்னார் மட்டக்களப்பு வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உணவுப்பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்திலேயே உள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.
உணவுப் பாதுகாப்பின்மை
2023 பெப்ரவரி மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட உணவு பயிர் பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐநாவின் அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.
இலங்கையில் தற்போது 3.9 மில்லியன் மக்கள் ( 17 வீதமானவர்கள்) மிதமான மோசமான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐநா அமைப்புகள், கடந்த வருடம் ஜூன் ஜூலை மாதங்களில் இது 40 வீதமாக காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன.
கடந்தவருடம் 60,000 மக்கள் மிகவும் மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்த நிலையில் தற்போது அது பத்தாயிரமாக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளன.
உணவுநுகர்வில் ஏற்பட்ட முன்னேற்றமே உணவுபாதுகாப்பில் ஏறபட்ட முன்னேற்றத்திற்கு காரணம் என தெரிவித்துள்ள ஐநா அமைப்புகள், உணவுவிலைகள் குறைவடைந்துள்ளமையும், அறுவடை காலத்தில் விவசாய சமூகத்தினர் மத்தியில் காணப்பட்ட முன்னேற்றமுமே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.
அதேசமயம் இலங்கையில் சாதகமான மாற்றம் தென்படுகின்ற போதிலும் கிளிநொச்சி நுவரேலியா மன்னார் மட்டக்களப்பு வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உணவுப்பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்திலேயே உள்ளது.
மேலும் மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியிலேயே அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மை காணப்படுகின்றதாகவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.