28 மணி நேரம் பயணம்; நடுவில் பொழிந்த குண்டுமழை: இந்திய மாணவிகளின் அதிர்ச்சி தகவல்!
ரஷ்யா தொடர்ந்து 5 வது நாளாக உக்ரைன் மீது தாக்குதலை தொடுத்து வருகின்றது, இந்நிலையில் உக்ரைனின் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் தலைநகரான கிவ்வில் இருந்து பாதுக்காப்பான இடத்திற்கு 28 மணிநேரம் காரில் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இதன்போது நடுவில் ரஷ்யப் படைகள் குண்டுமழை பொழிந்ததாக அந்த மாணவிகள் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவது, இந்தியாவில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்தவர் சுனேகா. இவர் உக்ரைன் நாட்டில் படித்து வருகிறார். இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்ததும் சுனேகா, அவரது தோழி ரச்சனா ஆகியோர் ஒரு தோழியின் வீட்டில் தங்கி உள்ளனர்.
பின்னர் அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் எதுவும் கிடைக்காத காரணத்தால் சுனேகாவும், ரச்சனாவும் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து ஒரு காரை வாடகைக்கு அமர்த்திய சுனேகாவும், ரச்சனாவும் அந்த காரில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து புகாரெஸ்ட்டுக்கு புறப்பட்டனர். அவர்கள் தற்போது ருமேனியா எல்லையில் உள்ள ஸ்லோவக்கியன் என்ற இடத்தில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.
இது தொடர்பாக சுனேகா வெளியிட்டு உள்ள காணொளியில், உக்ரைனில் தற்போது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் அங்கிருந்து தப்பித்து புகாரெஸ்ட் நோக்கி காரில் சென்று கொண்டு இருக்கிறோம். இதுவரை 28 மணி நேரம் தொடர்ந்து பயணித்து உள்ளோம்.
நாங்கள் வரும் வழிநெடுகிலும் எல்லாம் குண்டு மழை பொழிந்தது. உயிரை கையில் பிடித்து கொண்டு இங்கு வந்து உள்ளோம். விரைவில் ருமேனியாவுக்கு சென்று விடுவோம். அங்கு உள்ள இந்திய தூதரகம் உதவியுடன் விரைவில் இந்தியா திரும்பி விடுவோம் என்று நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.