காலி சிறைச்சாலையில் கைதிகள் உல்லாசம்!
காலி சிறைச்சாலைக்குள் இரு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதுடன் ஆடம்பர வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் சிறைக்குள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருகின்றார்கள் என்வும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணை
அவர்கள் தொலைபேசிகளை பயன்படுத்தும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த காணொளிகள் ஒரு மாதத்திற்கு முன்பே, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்தும், இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.
இதையடுத்து தகவல் வழங்கியவர்கள் நேற்றையதினம் இந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என தகவல் வழங்கியவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.